மிக்கி - மௌஸ் -online

Tuesday, December 30, 2008

அவனும் 27 ரூபாய்களும்


லக்னோவின் 'சடார்' தெருக்களில் சுற்றித் திரிந்த போது தான் அவனுக்கு ஒன்று மிகச் சரியாக புலப்பட்டது. இது ஒரு நவீன முலாம் பூசப்பட்ட ஒரு நகரம் என்று.பளபள கடைகளுக்கும், மளமள ஓட்டல்களுக்கும் பின்னால் மூக்கை பொத்திக் கொண்டு மட்டுமே போகக் கூடிய இடத்தில், மக்கள் கூட்டம் கூட்டமாக குடியிருந்தனர், பெரும்பாலான வடக்கத்திய நகரங்களைப் போலவே!. மிகப் பெரிய கோழிக்கறி கடையின் முன் அவர்கள் வீசியெறியும் வீணான கறியை எடுத்துப் போக காத்துக் கிடந்தனர் கந்தல்-சிறுவர்கள். வழக்கம் போல வீணான பொருட்களை வாங்க, அவனுக்கு பணத்திற்கு தேவையாக இருந்தது. பணத்திற்காக இப்போது தானியங்கி கணக்கியலாளர் இயந்திரத்தின், அதாங்க Automatic Teller Machine - ATM மின் உதவி தேவைப் பட்டது. ஒரு அலுவலக வேலையாக லக்னோ வந்திருந்தான், வேலை முடிந்து மாலை ஏழுமணிக்கு ரயிலில் சொந்த ஊர் திரும்ப வேண்டும். புறப்படுவதற்கு முன் ஏதாவது வாஙக நினைத்து கடைத்தெருக்களில் சுற்றிக் கொண்டு இருந்தான். வழியில் எதிர்பட்டவரிடம் தனக்கு தெரிந்த ஹிந்தியில் விசாரித்தான்.
"பாயி, இதர் SBI-க்கா ATM கஹா ஹை?"
"command-க்கா சாம்னே ஏக் petrol bank ஹை, உதர் ஹை"
"தன்யவாத் பாய்"
இரண்டு மிதிவண்டிகாரர்களையும், ஒரு இராணுவ வீரரையும் வழி கேட்டு பங்கை அடைந்த போது, ATM-மின் வெளியே நீண்ட வரிசை காத்திருந்தது. மெல்ல போய் அந்த ஜோதியில் ஐக்கியமானான். வெகுநேரமாகியும் உள்ளே யாரும் போவதாகவும், வெளியேவருவதாகவும் தெரியவில்லை. இரண்டு பேர் ATM-மை பிரித்து மேய்ந்துக் கொண்டிருந்தனர். ஒருவர் கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். சரியென்று, சுற்றிலும் பார்வையை மேய விட்டான். அப்போது Honda Activa-வில் நீல நிற சேலையுடன் ஒரு பெண் வந்திரங்கினாள். அவளின் சேலைக்குத் தோதாக நீல நிறத்தில் காதணியும், கை வளையலும் அணிந்திருந்தாள். ஹை-ஹீல்ஸும் (இதுக்கு தாய்த் தமிழில் என்ன சொல்வார்கள்? மக்கள் தொலைக்காட்சிக்கு எழுதி கேட்கலாமா? ), தலைக் கவசமும் அணிந்திருந்தாள்.


அவளும் வந்து அங்கே நின்றிருந்த ஜோதியில் வந்து அவனுக்கு பின்னாக ஐக்கியமானாள். சிறிது நேரத்திற்கு பின் அவளிடம் அருகே உள்ள வேறு ஏதாவது ATM பற்றி அவன் விசாரித்ததில், எந்த ஒரு ATM-மிலும் பணம் வருவதில்லையெனவும், 'சர்வர் டவுன்' எனவும் சொன்னாள். இதைக் கேட்டவுடன் அவன் மனம், ' திக்'கென்றது. பர்ஸை (பணப்பை தமிழில்) எடுத்து பணத்தை பார்த்தான். நேற்று சார்-கஞ்சில் இருநூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கியது, அமர்-கஞ்சில் 'டுண்டாய் கபாப்' சாப்பிட்டது, 'சிக்கான்' போட்ட சட்டை வாங்கியது போக 'இருநூற்றி ஐந்து' ரூபாய் மீதியிருந்தது. இன்னும் செலவுகள் இருந்தன. அருகில் இருந்த ICICI வங்கியின் ATM-ல் முயற்சி செய்து பார்க்கலாம் என போனான். இயந்திரத்திடம் கார்டைக் கொடுத்தவுடன் அது, உள்வாங்கி, கடித்து, மென்று, தின்று பின் காரித் துப்பியது. கூடவே "SORRY, YOUR TRANSACTION FAILED" எனச் சொல்லி பல்லிளித்தது. என்ன செய்வது? மணி காலை 10.00. மாலை ஊர் திரும்பியாக வேண்டும். வாடிய முகத்துடன் தங்கியிருந்த அறைக்கு வந்தான். அதுவரை தன்கியிருந்த ஒருநாள் வாடகை, இரு வேளை உணவு சாப்பிட்டிருந்தான். வரவேற்பறையில் விசாரித்த போது "இருநூற்றுச் சொச்சம் பில் வரலாம்" எனச் சொன்னார்கள். ஏதெதோ சொல்லி, மதிய சாப்பாட்டைத் தவிர்த்து, ஒருவாறு சரி செய்து 185 ரூபாய் கொடுத்து விட்டு வெளியே வந்தான். பர்ஸில் இருந்த இருபது ரூபாயுடன், ATM கடன் அட்டை (debit card), பையில் தேடியதில் தேறிய ஏழு ரூபாய் சில்லரை மிச்சமிருந்தது.
அவன் தங்கியிருந்த அறையிலிருந்து, இரயில் நிலையம் சுமார் 5 கி.மீ தூரம் இருந்தது, கையில் ஒன்றும், பின்னால் ஒன்றுமாக இரண்டு பெரிய சுமைகளுடன் அவ்வளவு தூரம் நடப்பதென்பது இயலாத ஒன்றாகவே பட்டது. அவனுக்கு ரிக்ஸா மிதிப்பவனின் பின்னால் ஒய்யாரமாக உட்காந்துப் போவதில் உடன்பாடு இல்லையாதலால் எப்போதும் ரிக்ஸாவைத் தவிர்த்து விடுவான். ஆனால் இன்று வேறு வழியில்லை!. ஒரு ரிக்ஸாகாரனிடம் விசாரித்ததில் முப்பது ரூபாய்க்கு ஒரு பைசா குறைக்க முடியாது என கறாராக (இது தமிழ் வார்த்தையா?) சொல்லி விட்டான். காலையில் ஒன்றரை ஆலு பரோட்டா சாப்பிட்டது. மதியமும் ஒன்றும் சாப்பிடவில்லை. மயக்கம் வருவது போல இருந்ததால், கையோடு எடுத்து வந்திருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து கொஞ்சம் தண்ணீரை ஊற்றிக் கொண்டான் வாயிலும், முகத்தின் மீதும். அப்போது ஒரு ரிக்ஸா ஏற்கனவே ஒரு பயணியுடன் அவனைக் கடந்துச் சென்றது. மனதில் ஏதோ தோன்ற அந்த ரிக்ஸாவை நிறுத்தி வினவினான். பின் ஒருவாரு 20 ரூபாய்க்கு அவனைச் சம்மதிக்க வைத்தான். இரயில் நிலையத்தில் அவனுக்கு கொடுத்த 20 ரூபாய் போக மீதமிருந்தது 7 ரூபாய். அன்று வழக்கமாக தாமதமாக வரும் ரயில் சரியான நேரத்திற்கு வந்திருந்தது. இரவு நேர சாப்பாட்டிற்கு பதில் ஒரு தேனீர் வாங்கிக் குடித்ததில் 5 ரூபாய் காலி!. மீதமிருந்தது ஒரெயொரு இரண்டு ரூபாய் நாணயம். அந்த 2 ரூபாய்க்கு எதுவும் வாங்க முடியாது எனத் தீர்மானமாக தெரிந்த பிறகு, இரயிலில் குப்பைகளைச் சுத்தம் செய்துக் கொண்டு வந்த கால் ஊனமுற்ற ஒரு பையனுக்கு அதைக் கொடுத்துவிட்டான்.

சுமார் 20 மணி நேர பயணத்திற்கு பின் சென்னை வந்திறங்கியபோது அவன் பர்ஸைப் போலவே அவனும் வாடி வற்றியிருந்தான். தூரத்தில் நீலநிறப் பின்புலத்தில் வெள்ளை நிறத்தில் 'STATE BANK ATM' என எழுதியிருந்தது. யாரோ ஒருவர் உள்ளேயிருந்து பணத்தை எண்ணிக் கொண்டே வெளியே வருவது மங்களாகத் தெரிந்தது. உடனே அவன் முகத்தில் ஒரு 1000 வாட்ஸ் பல்ப் எரிந்தது. அதன் எதிரிலேயே இருந்த இரயில்வே உணவகத்தைப் பார்த்ததும் 2000 வாட்ஸ் வெளிச்சம் பளிச்சிட்டது. அவனது பர்ஸும், அவனும் தன்னைப் பெருக்கிக் கொள்ளத் தயாரானார்கள்.
பி.கு - பதிவு முழுவதும் 'அவன்' என விளித்தது அடியேனைத் தான்!.

Friday, December 26, 2008

பறவைகள் பலவிதம் 4 - அஸிஸ்டன்ட் 'ஐயா'


எட்டு முடிந்து ஒன்பதாம் வகுப்பு படிப்பதற்காக எங்கள் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியில் என்னைக் கொண்டு சேர்த்தார்கள். எமக்கென்னவோ வீட்டுக்கு அருகிலேயே இருந்த சுமாரான அரசு பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது தான் லட்சியமாக இருந்தது.அரிசியில் புழு, குளிக்க தணுத்த தண்ணீர்ர் மற்றும் அறையில் மூட்டைப் பூச்சி என் பலப்பல நிஜ மற்றும் புனையப்பட்ட காரணங்களைச் சொல்லி விடுதியில் சேர்வதிலிருந்து தப்பித்தாகிவிட்டது. அரை வெற்றி.. வீட்டிலிருந்து தினமும் பேருந்தில் வந்து படித்துவிட்டு மாலையில் வீட்டுக்கு போவதென முடிவானது. ஹாஸ்டலிலிருந்து விலகும் முடிவை தெரிவிப்பதற்காக போன போதுதான் அவரைப் பார்த்தேன். தமிழ் கூறும் நல்லுலகில் 'ஆங்கிலம்' பற்றுவிக்கும் ஒரு ஆசிரியரை அன்புடன் "ஐயா" என அழைத்தது எங்கள் பள்ளியில் மட்டும் தான் இருக்கும். பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராக 'அஸிஸ்டன்ட் ஐயா' இருந்தார்.
சற்றே கருத்த நிறம், நல்ல குண்டான உடல் (பெரிய தொப்பையுடன்), ஐந்தடிக்கும் குறைவான உயரம், அலுவலகத்தில் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தார். என்னையும் உடன் கூட்டிக் கொண்டு,அப்பா அவரிடம் போனார். அப்பா கண்டிப்பானவர் அதனால் தான் என்னையும் இழுத்துக் கொண்டு போயிருந்தார்.
"வணக்கம் சார்! இவன் என் பையன் ஒன்பதாமப்புல சேக்கனும்"
"நல்லது, அட்மிசன் எல்லாம் முடிஞ்சதா? "
"முடிஞ்சது, ஒரு சின்ன பிரச்சனை, முதல்ல ஹாஸ்டல்ல சேர்க்கறாதா சொல்லியிருந்தோம், ஆனா பையன் சேரமாட்டேங்கறான்"
அவர் என்னை கோபமாக பார்த்தார், நான் அப்பாவின் பின்னால் ஒளிந்தேன்.
"அப்படியா? என்னலே! ஹாஸ்டல்ல சேரமாட்டேனியாமே"
நான் ஒன்றும் பேசவில்லை. அப்பா அவரிடம்,
"பையன் கொஞ்சம் குறும்பு அதிகம்!. நீங்கதான் பாத்துக்கனும்".
இதை ரொம்ப அவசியம் சொல்லத்தான் வேண்டுமா.? என்னை உற்றுப் பார்த்த அவர்,
"அது பார்த்தாவே தெரியுது!!. பையன் பேர் என்ன? என் க்ளாஸ்லயே போட்டு தோலை உறிச்சுடறேன்"
ம்ஹும்! நான் பார்க்காத வத்தியாரா? ஆனால் பள்ளியை பற்றி நான் கேள்வி பட்டது எனக்கு பயத்தை கிளப்பியது. அது சரி... நம்ம மூஞ்சிய பாத்தா அப்படியா தெரியுது?.


பள்ளி தொடங்கும் நாளில் என்னை மட்டும் ஒன்பதாம் வகுப்பு 'சி' பிரிவிலும், என்னுடன் எட்டாவது படித்து அந்த பள்ளிக்கு வந்திருந்த நண்பர்களையெல்லாம் ஒன்பதாம் வகுப்பு "ஈ" பிரிவிலும் போட்டார்கள். எனக்கு மிகவும் கவலையாக போய்விட்டது. பின் அலுவலகத்தில் வேலை செய்யும் அப்பாவுக்கு தெரிந்த ஒருவர் வந்து "ஒன்பது 'சி' ரொம்ப நல்ல வகுப்பு, அஸிஸ்டன்ட் ஐயா தான் க்ளாஸ் டீச்சர், ரொம்ப நல்லவர் " என்றார். எங்கள் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் ஆகியிருந்தது பாவம் அவருக்கு தெரியாது. நான் வகுப்புக்கு போனேன், 'ஐயா' வகுப்புக்குள் வந்தவுடன் என்னைத் தனியாக கூப்பிட்டார்.
"வாலே!, வந்து முதல் பென்சிலே முதல் ஆளா உட்காரு".
நடு பென்சில் நண்பர்கள் புடை சூழ உட்காருவது தான் எனக்கு பழக்கம். ஆனால் என்னை தனியாக அதுவும் முதல் பென்சில் உட்கார வைத்திருந்தார்.
"உங்க அப்பா சொல்லியிருகார்ல!, உன்னை தனியாக கவனிக்கச் சொல்லி"
நான் எனது அப்பாவை நினைத்துக் கொண்டேன். அவரின் மதுரைத் தமிழ் எனக்கு புதுமையாகவும், வித்தியாசமாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் அதே பள்ளியில் முதலிலிருந்து படித்து வந்த மாணவர்கள் அவரைப் பற்றிச் சொன்னது வேறு விதமாக இருந்தது."ஐயா ரொம்ப நல்லவர்" என்பது பெரும்பான்மையானவர்களின் கருத்தாக இருந்தது. எங்கள் அகராதியில் நல்லவர் என்றால், கம்பை கையில் எடுக்காதவர், எடுத்தாலும் சும்மா மிரட்டிவிட்டு அடிக்காமல் விட்டுவிடுபவர் என்று அர்த்தம். ஐயா எப்போதும் ஒரு கம்பை கையில் வைத்திருப்பார். எனவே அவர், பிந்தய ரகத்தினராக இருக்க வேண்டும்.
நான் முன்பு படித்த தமிழ் வழி பள்ளியில் சொல்லித் தந்த ஆங்கிலமெல்லாம் , 'கம்'க்கு எதிர் 'கோ', 'சிட்'க்கு எதிர் 'ஸ்டேண்ட்'. வாக்கியத்தில் எங்காவது yesterday, last week வந்தால் verb-கூட 'ed' சேர்த்து எழுத வேண்டும். tomorrow, next week வந்தால் will சேர்த்து எழுத வேண்டும் என்பது தான். இப்படிபட்ட பின்புலத்திலிருந்து வந்திருந்த எனக்கு ஆங்கிலத்தில் 'essay' என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. அதை நான் முத்ல முறை கேள்விப்பட்டேன். ஆங்கில நேட்டுப் புத்தகத்தின் முதல் பாடத்தில் essay- வை S.A என எழுதி வைத்தேன். அதற்கு ஏதோ விரிவாக்கம் இருக்கும் என்பது எனது எண்ணம். இந்த அளவில் ஆங்கிலம் படித்ததால் முதல் பருவத் தேர்வில் ஆங்கில பாடத்தில் 32 ம்திப்பெண்கள். தோல்வியடைந்துவிட்டேன். மற்ற எல்லா பாடங்களிலும் எப்படியோ பாஸ் ஆகி இருந்தேன். ஐயா, ஏற்கனவே என்மேல் அளவுகடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்ததால்!! என்னை பென்சிலிருந்து இறக்கி அவர் மேசையின் அருகிலேயே கீழே உட்காரவைத்தார். இப்படித்தான் அவர் எனக்கு நெருக்கமானார். ஐயா எப்போதும் கையை இருமவது போல வைத்துக்கொண்டு வாயை பக்கவாட்டில் அசைத்துக் கொண்டே இருப்பார். பலர் அது அவருடைய இயல்பு என நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஐயாவுக்கு கடலைமிட்டாய் என்றால் மிகவும் இஷ்டம்!, வகுப்பு இடைவேளைகளில் கடலை மிட்டாய் வாங்கிவந்து அதைத்தான் அப்படி சாப்பிடுகிறார் என்ற பிரம்ம இரகசியத்தை முதன்முதலில் கண்டு பிடித்துச் சொன்னவன் நான்தான்!!. ஐயா என்னை அவர் அருகே அமரவைத்ததன் விளைவு!.

அதன் பின் பரிட்சைத் தாள் கொடுக்கும் போதெல்லாம், அவரின் பிரம்பை எடுத்து ஒளிய வைப்பது அல்லது சன்னல் வழியாக வெளியே வீசியெறிவது போன்றவை எனது பணிகளாயின. அவர் என்னை அடிக்க வரும் போது, அவரின் பிரம்மை பிடித்துக் கொண்டு வகுப்பு முழுவதும் ஓடியதும் உண்டு. பின்னாளில் ஆங்கிலத்தில் புலமை பெற்று 'எண்பது' சதம் வாங்கும் அளவிற்கு வளர்ந்ததும், அவர் என்னை பென்சின் மேலே உட்காரச் சொல்லியும் மறுத்துவிட்டு அவர் அருகிலேயே ஒன்பதாம் வகுப்பு முழுதும் உட்கார்ந்திருந்தேன். ஐயாவுக்கும் எனக்குமான உறவு இவ்வாறாக இன்னும் நெருக்கமானது. ஓரிருமுறை என்னை அவர் வீட்டுக்கு கூட்டிப் போனார். நான் உணவு இடைவேளையின் போது ஐயாவுக்காக கடலை மிட்டாய் வாங்கி வந்து, பாதியை நான் வைத்துக் கொண்டு, அவருக்கு கொடுத்ததுண்டு. பத்தாம் வகுப்பிலும் எங்களின் வகுப்பு ஆசிரியராக அவரே வந்தது நான் செய்த பாக்கியம். பத்தாம் வகுப்பு முடிவுகள் வந்த போது, என்னை 'வெரி குட்' என பாராட்டினார். பிற்காலத்தில் பன்னிரண்டாவது வேறு பள்ளியில் படித்து முடித்து கல்லூரியில் சேர்ந்ததைச் சொல்ல அவரைத் தேடி போன போது, அவர் ரிட்டயர்டாகி சொந்த ஊருக்கே போய்விட்டிருந்தார். அவர் என்னை "எருமை மாடு" எனத் திட்டிக்கொண்டே பிரம்புடன் என்னைத் துரத்தியது என் நினைவில் வந்தது.
பறவைகள் பறந்து போனால் என்ன? அவற்றின் நினைவுகள் நெஞ்சோடு தங்கி விடுகின்றன என்றும், என்றென்றும்!!.

Thursday, December 25, 2008

ரயில் பயணங்களில்...

தலைப்பை பார்த்துட்டு இது ஏதோ இரயில் பயணத்தில் ஏற்பட்ட கண்டதும் காதல் பற்றிய பதிவுன்னு நெனச்சா அதுக்கு நான பொறுப்பாக முடியாது. என்ன பண்றது நமக்கு அப்படி ஒண்ணும் நடக்க மாட்டேங்குதுன்னு வயித்தெறிச்சல்ல போட்ட பதிவு!. ரயில்ல பயணம்னவுடனேயே நாம் எல்லாரும் பயப்படற ஒரு விசயம், அங்க கொடுக்கற சாப்பாடு, ரசம் மாதிரி ஒரு தால் (சாம்பார் மாதிரி), வரட்டி மாதிரி காய்ந்த மிகவும் மெல்லிய (எப்படித்தான் அவ்ளோ மெல்லிசா அவங்களால மட்டும் ரொட்டி செய்ய முடியுதோ, 28 வருசமா வீட்ல நான் பார்த்ததே இல்லை.) ரெண்டு ரொட்டி, ஒரு காய் பொரியல் (சப்ஜி), மோருக்கும் தயிருக்கும் கலப்புத் திருமணம் செய்தமாதிரி (பயங்கர புளிப்பாக) ஏதோ ஒண்ணு, கவிழ்த்தா ஊத்திக்கற மாதிரி ஒரு ரூபா ஊறுகாய் பொட்டலம் எல்லாம் சேத்து 35 ரூபாய் கொடுத்து வயிரெறிஞ்ச அனுபவம் உங்களுக்கு நிச்சயம் இருந்திருக்கும்.
நான் சொல்ல வந்தது என்னன்னா, ரயில்ல கொடுக்கும் சாப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும்னு ஒரு மெனு போட்டு IRTC (Indian Railways Cattering and Tourism Corporation)-ல கொடுத்து இருக்காங்க. சில சதாப்தி ரயில்களில் கை கழுவும் இடத்தில்(வெளிநாட்டவர்காக?!..) ஃப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்காங்க. அதிலிருந்து,

I. BREAKFAST:
1.BREAD WITH BUTTER
2.CUTLET (Veg)
OR
OMELET (Non Veg)
4.TOMATO KETCHUP

NONVEG BREAKFAST @ Rs 21
VEG BREAKFAST @ Rs.18
COFFEE @ Rs.5.50
TEA WITH TEA BAG @ Rs.4.50

II. LUNCH / DINNER :
1.RICE
2.PARATHA
3.DAAL - HARD IN CONSISTANCY
4.VEG DISH (Veg) / EGG CURRY / CHICKEN CURRY (Non Veg)
5.CURD
6.PICKLE
7.DRINKINGWATER IN SEALED GLASS
VEG LUNCH/DINNER @ Rs.32
NON VEG LUNCH/DINNER @ Rs.37

"HAPPY JOUNEY கூடவே Please do not Pay Extra" னு ப்ரேம்ல போட்டுவச்சிருக்காங்க. இதில் பெரும்பாலான நேரம் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். இதிலே AC கம்பார்ட்மெண்ட்க்கு கொடுக்கும் சாப்பாடு ஒரு மாதிரியாகவும் ஸ்லீப்பர் கோச்சுக்கு கொடுக்கும் சாப்பாடு வேறு மாதிரியாகவும் இருக்கிறது. பீகார், ஜார்கண்ட் போகும் பெரும்பாலான ரயில்களில் சாப்பாடு நன்றாகவே இருக்கிறது (எல்லாம் லாலுவின் மகிமை). பெரும்பாலான தமிழ்நாடுவரும் ரயில்களில் சாப்பாடு மோசம் என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடுத்த முறை ரயில் பயணத்தின் போது இவற்றை பார்த்து, முடிந்தால் கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.

Friday, December 19, 2008

என் முதல் அனுபவம் !!

அப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பாதி வருடம் வேறு பள்ளியில் படித்து விட்டு, மீதியை படிக்க புதிய பள்ளிக்கு வந்திருந்தேன். வழக்கம் போல ஆங்கிலம் எனக்கு சிம்ம சொப்பனம் ஆனது. ஆனால் அங்கே ஆங்கிலம் சொல்லித் தந்த டீச்சரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிக அழகாக சிரிப்பார் என்பதற்காகவும், அதிகம் அடிக்க மாட்டார் என்பதற்காகவும். என்ன செய்வது எனக்கு பிடிக்கும் என்பதற்காகவெல்லாம் மதிப்பெண் போடமாட்டாங்களே!. எனவே அரையாண்டுத் தேர்வில் மாதிரிக்காகவும், முழு ஆண்டுத்தேர்வில், முழு அளவிலும் 'பிட்' அடிப்பது என நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து முடிவு செய்தோம். நினைவில் கொள்க! மூன்றாம் வகுப்பு!!. நான் அது வரை பிட் அடித்ததே இல்லை!. எனவே மற்றவர்களிடம் அறிவுரை கேட்டுக் கொண்டிருந்தேன். வெகு நாள் ஆனதால் அவர்களின் பெயர் மறந்து விட்டது.



முதலாமவன், "சின்ன சின்ன பேப்பரா எடுத்து அதிலே எழுதிக் கொண்டு வந்து விடலாம்"
நான், " ஆனா செக் பண்ணி புடிச்சிட்டாங்கன்னா, என்னடா பண்றது?"
இரண்டாமவன், "ஒரு அடி ஸ்கேல் எடுத்து அதிலே எழுதிட்டு போயிடலாமா?"
நான், "ஆமாண்டா, நல்ல ஐடியா, பென்சில்ல எழுதிட்டு போயிடலாம், செக்பண்ணாங்கண்ணா அழிச்சிடலாம்டா."
முத்லாமவன், "பெரிய ஹால்லதான் டெஸ்ட் நடக்கும், ஸ்கேல பாத்து எழுதறது கஷ்டம்டா"
நான், "சரி, வேற என்னடா செய்யமுடியும்?"
இரண்டாமவன் "என்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்குடா!, ஒரு வெள்ளை பேப்பர்ல சோப்பை வச்சி எழுதலாம்டா, பாத்தா தெரியாதுடா."
அப்போதெல்லாம் பரிட்சைக்கு அட்டை, பேப்பர் எல்லாம் நாம் தான் கொண்டு போக வேண்டும்.
நான், "பின்ன எப்படிடா படிக்கறது?"
இரண், "அப்பறம் கொஞ்சம் எச்சல் தொட்டு தடவி பாத்தா தெரியும்டா"
ம்..... ரொம்ப சினிமா பார்ப்பான் போல!, அந்த காலத்தில் 'லவ் லெட்டர்' எல்லாம் சினிமாவில் இப்படித் தான் எழுதுவாங்க.
முதலா "அப்படியெல்லாம் பாத்தா தெரியாதுடா, நான் ஏற்கனவே பண்ணி பாத்துட்டேன்"
முதலாமவன் தொடர்ந்தான்....."நான் ஒரு ஐடியா சொல்றேன்.... ஒரு மெழுகுவர்த்தி எடுத்துக்கோ, அதை பென்சில் மாதிரி கூரா சீவிக்கோ...."
"உம்...." ரெண்டு பேரும் சேந்து சொன்னோம்
"அட்டையின் பின்னாடி, முன்னாடி ரெண்டு பக்கமும் எழுதிக்கோ.."
"அப்பறம்"
"டெஸ்டுக்கு வரும் போது குங்குமம் வச்சிட்டு வாங்கடா!!"
"எதுக்குடா?"
"சொல்றத கேள்டா.... அந்த குங்குமத்தை எடுத்து அட்டை மேல தூவு, அப்பறம் மெல்ல தடவு மெழுவர்த்தில எழுதனது தெரியும்."
ரெண்டு பேரும், "சூப்பர் ஐடியாடா! ஆனா நெத்தியில இருக்குற குங்குமம் போதுமாடா?"
அவன், "வேணும்னா ஒரு பொட்டலத்துல கட்டி எடுத்துக்கலாம்டா"
"ஓகே" ரெண்டுபேரும் ஒற்றை குரலில் சொன்னோம்.

மூன்றுபேரும் ஆங்கில பாடங்களை பிரித்துக்கொண்டு முக்கியமான் கேள்வி-பதில், அர்த்தம்-எழுதுதல், எதிர்பதம்-எழுதுதல் எல்லாவற்றையும் எழுதிட்டு போனோம். மூன்று பேருக்கும் சேர்த்து குங்குமம கொண்டு போனது நாந்தான்!. பரிட்சையின் போது, மூன்று பேருக்கும் சேர்த்து ரெண்டு மார்க்-குதான் கேள்வி வந்திருந்தது. அதனால என்ன? ரொம்ப அழகா ப்ளான் பண்ணி யார்கிட்டயும் மாட்டாம பிட் அடிச்சு முடிச்சிட்டோம்.
அப்பறம் சொல்ல மற்ந்துட்டேனே, இதுதான் நான் 'பிட்' அடித்த முதல் அனுபவம், நீங்க வேற எதாவது நெனச்சு வந்திருந்தால் இப்போ இன்னொரு முறை பதிவை சரியான கண்ணோட்டத்துடன் படிங்க...

Thursday, December 18, 2008

பறவைகள் பலவிதம் பாகம் 3- மிஸ்டர் ஐயர்



ஒரு வெள்ளிக் கிழமை மாலை நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து சேலம் போகும் ஒரு தனியார் பேருந்துள் ஏறியமர்ந்தேன். ஓட்டுநருக்கு பின் இருக்கை. எப்போதுமே பேருந்தின் முன்னிருக்கைகளில் அமர்ந்துச் செல்வது என்பது ஒரு சுகமான அனுபவம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை நான் தவறவிட்டதில்லை. பேருந்து புறப்பட தயாராக இருந்தது.சிறிது நேரத்தில் ஒரு ஆசாமி பேருந்தில் ஏறி பின்னால் ஒரு நோட்டம் விட்டு விட்டு, என்னறுகில் வந்து உட்கார்ந்தார். நடுவிலும், பின்னாலும் இருக்கை காலி இல்லாத காரணத்தால் இருக்கலாம். சுமார் நாற்பது வயதிருக்கும், பார்க்க சாமியார் போல இருந்தார். நன்கு வளர்ந்த தாடி, காவி நிற வேட்டி அணிந்திருந்தார். கையில் ஒரு ஜோல்னா பை இருந்தது. நான் சற்றே சன்னலோரம் தள்ளியமர்ந்தேன், ஒரு பாதுகாப்புக்காக தான். பேருந்து புறப்பட்டு பாதி தூரம் கடந்திருந்தது. எதிரே ஒரு லாரி கடந்துச் சென்றது. அதிலிருந்து வந்த வித்தியாசமான மணம் பேருந்தில் பலரின் முகத்தைச் சுழிக்க வைத்தது. சிலர் கைக்குட்டையினால் மூக்கை பொத்திக் கொண்டனர். வேறு சிலரோ கையை மூக்கின் முன்னும் பின்னும் ஆட்டி, "சே! என்ன ஒரு நாற்றம்" என்றனர்.
அருகிலிருந்த ஆசாமி இதில் மூன்றாம் ரகம். நான் சற்றே திரும்பி அவரிடம், "அது ஃபிஷ்மீல், அதாவது கருவாடு கொண்டு போகும் வண்டி" என்றேன்.
"ஐ அண்டர்ஸ்டாண்ட் ஃபிஷ்மீல், அதை என்ன செய்வாங்க" அவர் ஆங்கிலம் பேசியது எனக்கு வியப்பைத் தந்தது..
"நாமக்கல்லில் கோழிப் பண்ணைகள் அதிகம். தினம் ஒரு முட்டையிடும் கோழிக்கு, புரோட்டீன் அதிகம் தேவைப்படும், ஃபிஷ்மீலில் அதிகபட்ச புரோட்டின் உள்ளது"
"ஓஹோ"
"நாமக்கல்லில் கோழித்தீவனம் தயாரிக்கும் மில்கள் நிறைய உள்ளன, எனவே இங்கே கருவாடு ஏற்றிப் போகும் வண்டிகளும் அதிகம்."
அவர் தன்னை கணேஷ் என அறிமுகப் படுத்திக் கொண்டார், அவரின் முழு பெயர், கணேஷ் ஐயர் என்பது அவரிடம் பேசியதிலிருந்து தெரிந்தது. பரஸ்பர அறிமுகத்திற்குப் பிறகு இருவரும் சொந்த விசயங்களை பகிர ஆரம்பித்தோம். அவரிடம் பேசியதிலிருந்து, அவர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கையியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் என்பது தெரியவந்தது. பெங்களூரிலிருந்து வெளிவரும் "டைம்ஸ் ஆப் இந்தியா'" பத்திரிக்கையின் சப்-எடிட்டரக பணிபுரிபவர் என்பது கொசுறுத் தகவல். அவர் தோற்றத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை எனபது என்னை சற்றே நிலைகுலையச் செய்தது. அதுவரை என் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்ததை கேட்டே விட்டேன்.
"பின்பு ஏன் இந்த சாமியார் வேஷம்?"
இதைக் கேட்டு பெரிதாகச் சிரித்தவர்,
"நான் சாமியார் இல்லை, எனக்கு கல்யாணமாகி ஒரு பையன் இருக்கான்"
"எங்கே?"
"மனைவி, பையன் ரெண்டு பேரும் பெங்களூரில் இருக்கிறார்கள்"
"நீங்கள் மட்டும் ஏன் இப்படி....?"
" எனக்கு ட்ரவல் பண்றது பிடிக்கும், அதுவும் நெடுந்தூரப் பயணங்கள்."
"அப்படியா இப்போ எந்கேயிருந்து வர்றீங்க?"
" வீட்டை விட்டு கிளம்பி, 25 நாளாச்சு, மகாராஷ்ட்ரத்தைச் சுத்திட்டு இப்போ கேரளா வழியா பெங்களூர் போறேன்!."
" டோண்ட் மிஸ்டேக் மீ!, ஒரு ஃபாரின் ரிட்டார்ன் இப்படி பரதேசி மாதிரி காவி வேஷ்டியேல்லாம் கட்டிட்டு...."
"ஹலோ! வேஷ்டி நம்மோட ட்ரெடிஷ்னல் ட்ரெஸ்.எனக்கு இது பிடித்திருக்கிறது, அது மட்டுமில்ல நெடுந்தூர பயணங்களில் இதுதான் கம்ஃபார்டபில்". நமக்கு எங்கே அதெல்லாம் தெரியப் போகிறது. இதுவரை சேலத்திலிருந்து சென்னை போனது தான் நான் போன நெடுந்தூரப் பயணம்.
அதன்பின் பேச்சு தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியத்தின் மீது திரும்பியது, அப்போது மற்றுமோர் கருவாடு நிரம்பிய வண்டி கடந்துச் சென்றது. மற்றவர்கள் முகம் சுழிக்க, இம்முறை நண்பர் மூக்கை பொத்தவில்லை, மாறாக ஒரு புன்னகையை உதிர்த்தார். அந்த புன்னகையின் அர்த்தத்தை எங்கள் இருவரைத் தவிர மற்றவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் என்னை, நண்பனாக ஏற்றுக் கொண்டதற்கான அறிகுறி அதில் தெரிந்தது. நாங்கள் பயணம் செய்த பேருந்து சேலத்தை அடையும் முன் இருவரின் மின்னஞ்சல் முகவரிகள் கை மாறியிருந்தன. அதன்பின் இரு முறை தொலை பேசினோம். என்னிடம் கைப்பேசி இல்லை யாதலால் தொடர்பு வெகுநாள் நிலைக்கவில்லை. பின்னாளில் அவர் ஆனந்த விகடனில் தொடர் எழுத ஆரம்பித்த சமயம், அதன் ஒரு நகலை எனக்கு மின்னஞ்சல் செய்வார். சில மின்னஞ்சல்களுக்கு பின் அதுவும் நின்று போனது.

சமீபத்தில் ஹரித்துவார் போன போது சில் காவி வேட்டியணிந்த சாமியார்களை பார்க்க நேர்ந்தது.
"இவர்களில் சிலபலர் அமெரிக்கன் ரிட்டர்ன்களாக இருக்கக் கூடும், அவரவர் வாழ்க்கை, வாழ்வது அவரவர் இஷ்டம்"

உண்மையிலேயே பறவைகள் பலவிதம் தான்!!.

பி.கு: ராபின் சர்மா எழுதிய, "தி மாங்க் ஹூ சோல்ட் ஹிஸ் ஃபெராரி" புத்தகத்தில் இது போன்ற ஒரு பாத்திரம் வரும்.

Tuesday, December 16, 2008

இரவும் நிலவும்




மாலை ஐந்தரை மணிக்கே வானம் இருட்டியிருந்தது. டிசம்பர் மாதம் அதுவும் இரண்டாவது வாரத்தில் 'இரவு', ஆறு மணிக்கே ஆரம்பமாகும். கடல்மட்டத்திலிருந்து சுமார் பத்தாயிரம் அடி உயரத்தில் இமய மலைச் சரிவில் உள்ள ரம்மியமான ஊர் ஜோஷிமட், தமிழில் ஜோதிர்மடம் என்று சொல்லலாம். பொதுவாக சூரியன் காலை ஏழு மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை தான் தரிசனம் கொடுப்பான். அதிலும் மலைச்சரிவின் இட வல பக்கங்களைப் பொறுத்து சூரியஒளியின் நேரம் மாறுபடும். சூரியன் மறைந்து நிழல் படரத்தொடங்கிய அந்தத் தருனத்தில் குளிர் இருளை முந்திக் கொண்டு ஊரைத் தழுவ ஆரம்பித்திருந்தது. நேரமாக நேரமாக தழுவலின் இறுக்கம் அதிகமாகிக் கொண்டே போனது. மக்கள் தீமூட்டி அதன் அருகே அமர்ந்துக் கொண்டும், சிலர் தீ மூட்டி அதை உறிஞ்சிக் கொண்டும் இருந்தனர். சுமார் ஏழு மணிக்கு குளிரும்-இருளும் கைகோர்த்துக் கொண்டன.பாவம் அவர்களின் கூட்டணி வெகுநேரம் நீடிக்க வில்லை. முழுநிலவின் வருகையைக் கண்ட 'இருள்' தனது ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டது. ஒரு கிழக்கு மலையிடுக்கிலிருந்து மெல்ல எழுந்த ஒளிக்கீற்று சிறிது சிறிதாக வளர்ந்து முழுநிலவாக பிரசவமானது. அந்த நிலவொளியின் பின்னனியில் மலையிலிருந்த ஊசியிலை மரங்கள், கறுத்து நிழல் போல் தோன்றின. மேகங்களற்ற வான வீதியில் நட்சத்திர பார்வையாளர்களின் முன், நிலவு தன் ஊர்வலத்தை நடத்திக் கொண்டிருந்தது. ஊரில் இருந்தவர்களில் சிலர் நெருப்பின் துணையையும், சிலர் நெருப்பையொத்த துணையையும் தேடி ஏற்கனவே அடைந்திருந்தனர்...