மிக்கி - மௌஸ் -online

Wednesday, February 25, 2009

கேர்ள் ஃப்ரண்ட் - சிறு கதை


என் பெயர் ஹரி. பதினோரு வயசு, அரசு உயர்நிலை பள்ளியில் ஐந்தாம் வகுப்பு 'அ' பிரிவு. வீட்டு பக்கத்திலேயே தான் ஸ்கூல். அப்பா கூட்டுறவு ஆபீஸ்ல கிளார்க் வேலை பார்க்கறார். அம்மா வீட்ல சமையல் செய்வாங்க, ஒரு தம்பி மூன்றாம் வகுப்பு 'இ' பிரிவு, எங்க ஸ்கூல்-ல தான் படிக்கறான். வீட்டு பக்கதிலேயே தான் ஸ்கூல் இருக்கு. காலையிலே மணி சத்தம் கேட்டவுடனேயே ஓட ஆரம்பித்தால் 'ப்ரேயர்'-க்கு போய் சேர்ந்துடுவேன். எனக்கு க்ளாஸ் ப்ரண்ட்ஸ் ரெண்டு பேர், சீனிவாசன், பிரகாஷ். எப்பவும் மூணு பேரும் ஒண்ணாதான் உட்காருவோம். இன்ட்ரவல் சமயத்தில குச்சி மிட்டாய் வாங்கி சாப்பிடுவோம். மதிய இடைவேளை-ல எட்டி-உதைக்கும் விளையாட்டு விளையாடுவோம். சாயந்தரம் ஐந்தரை மணிவரை ட்யூசன் இருக்கும். அதுக்கப்பறம் வீட்டுக்கு வந்தப்பறமும், லீவு நாள்-அப்பவும் வீட்ல ரொம்ப போரடிக்கும். எங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தான், மித்ரா வீடு. மித்ரா செயின்ட் ஜான்ஸ் ஸ்கூல்ல 4-ம் கிளாஸ் படிக்கறா. அவங்க அப்பா தெலுங்கு பேசுவார், காலேஜ்ல பெரிய வாத்தியாரா இருக்கறதால மித்ரா-வை இங்கிலீஸ் மீடியத்தல சேர்த்து படிக்க வைக்கறார்.

எங்க ரெண்டு பேர் வீடும் ஒரே காம்பௌன்ட்-ல தான் இருக்கு. வீட்டுக்கு பின்பக்கம் வராண்டா கூட ஒண்ணு தான் எங்க வீட்டு பின்னாடி நாலு ரோஜா பூச்செடி இருந்தது. மித்ரா வீட்டு முன்னாடி ஒரு மல்லிப்பூ செடியும் பக்கத்தலயே ஒரு எலுமிச்சை மரமும் இருந்தது. எங்க வீட்டு செடிக்கு அவளும் அவங்க வீட்டுசெடிக்கு நானும் தண்ணி ஊத்துவோம். மல்லிப்பூச் செடிக்கு கீழே தான் நாங்க விளையாடுவோம். தினமும் சாயந்தரம் காமபவுண்ட் மேல ஏறி மல்லிப்பூ பறிப்போம். அதை மித்ரா அம்மா கட்டி அவளுக்கு வச்சி விடுவாங்க. ரெண்டு பேரும் லீவு நாள்-ல மட்டும் தான் விளையாடுவோம். நான் மித்ரா வீட்டுக்கு போனா அம்மா திட்டுவாங்க, மித்ரா என் கூட விளையாடினா அவங்க அம்மா கூப்பிட்டு தெலுங்குல திட்டுவாங்க. எப்பவும் அவங்க வீட்டுக்கு போக மாட்டேன், ஆனா ஒளிஞ்சி விளையாடும் போது மட்டும் போக வேண்டி இருக்கும். நான் எப்போ கடைக்கு மளிகை சாமான் வாங்க போனாலும் மித்ராவையும் அவங்க அம்மாவுக்கு தெரியாமல் கூட்டி போவேன். மிச்சமான காசிலே 'கிஸ்மே எக்லேர்ஸ்' வாங்கி சாப்பிடுவோம், அது ரெண்டுபேருக்குமே ரொம்ப புடிச்ச சாக்லேட். பெரிசா இருக்கறதால ஒண்ணு வாங்கி ரெண்டு பேரும் சாப்பிட்டுக்கலாம். எப்போவாவது ஞாயிற்று கிழமைகள்ல ரெண்டு பேரோட அம்மாவும் கோவிலுக்கு ஒண்ணா போவாங்க, நாங்களும் கூட போவோம். அங்கே மித்ரா கூட இருக்கும் போது ரொம்ப ஜாலியா இருக்கும். கோயில்-ல கொடுக்கற பிரசாதத்தை ரெண்டு பேரும் பிரிச்சு சாப்பிடுவோம். ஒரு நாள் கோவில்- லருந்து திரும்ப வரும் போது, மித்ரா, "நாம ரெண்டு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்போம்" -னு சொன்னா. நானும் சரின்னு சொன்னேன்.அன்னைக்கு மதிய நேரத்தில அப்பா அம்மா எல்லாரும் தூங்கினதுக்கப்பறம், ஜன்னல்-ல ஏறி என்னை விளையாட கூப்பிட்டா, அன்னைக்கு சாயந்தரம் வரைக்கும் யாருக்கும் தெரியாமல் ரெண்டு பேரும் வெளையாடினோம்.அன்னைக்கு நிறைய கதை பேசினோம்.


அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு ஒருநாள் மதியான நேரம் சாப்பிட வீட்டுக்கு வந்தப்ப, மித்ரா ஸ்கூலுக்கு போகாம வீட்ல இருந்தா. அம்மா வந்து அவங்க வீடு காலி பண்ணிட்டு திருத்தணிக்கு போறதா சொன்னாங்க. ஸ்கூல் திரும்ப போகும் போது மித்ராவை எதிர்ல பார்த்தேன். அவங்க அப்பாவுக்கு திருத்தனிக்கு ட்ரன்ஸ்பர் ஆயிடுச்சுன்னு அழுதுட்டே சொன்னாள். அன்னைக்கு மதியம் ஸ்கூல்ல விளையாட்டு பீரியட் இருந்துச்சு, ஆனா எனக்கு விளையாட பிடிக்கலை, கிரிக்கெட்ல முதல் பால்-லயே அவுட் ஆகி வெளிய வந்துட்டேன். வயித்தில இறுக்கமா இருந்தது. நேரமாக நேரமாக அதிகமா வலிச்சது, அழுகை அழுகையா வந்தது. டீச்சர் ஒரு பையனை கூப்பிட்டு என் பையையும் கொடுத்து, என்னை வீட்ல விட்டுட்டு வரச் சொன்னாங்க. வீட்டுக்கு வந்தப்பறம் காலியாக இருந்த மித்ரா வீட்டையும், எலுமிச்சை மரத்தையும், மல்லிப்பூச்செடியையும் சுத்திச் சுத்தி வந்தேன். இப்போ வயித்துவலி இல்லை ஆனா கண்லேருந்து தண்ணி தண்ணியா வந்துட்டிருக்கு.

Monday, February 09, 2009

நான் கடவுள்- படம் பற்றிய ஒரு பார்வை.


"அஹம் பிரம்மாஸ்மி" என்பதை மொழி பெயர்த்தால் "நாமே கடவுள்" என வரும். படத்தில் ஆர்யா-வை தவிர மற்ற அனைவருமே சராசரி மனிதர்கள் தான். அவர் மட்டுமே கடவுள் ஆதியும் அந்தமும் உணர்ந்தவர்... ஜோசியர்களின் பேச்சைக் கேட்டு தான் பெற்றெடுத்த மகனை 14 வருடங்கள் தன் பார்வைக்கு அப்பால் வளர்க்க வேண்டி காசியில் விட்டு விட்டு பின் அவனை தேடி காசி வருகிறார் அப்பா தனது மகளுடன். பிணத்தின் முன்னால் அமர்ந்து ஸ்லோகங்கள் சொல்லி இறந்தவர்களுக்கு மோட்சம் அளிக்கும் ஒரு 'அகோரி'யாக சாதுக்களால் வளர்க்கப் பட்ட தன் மகன் ருத்ரனைக் கண்ட மாத்திரத்தில் மயங்கி விழுகிறார் அப்பா. அவனை ஒருமுறை ஊருக்கு கூட்டிப்போய் அவன் அம்மாவிடம் காட்டுவதற்காக மகனை வளர்த்த சாதுவிடம் அனுமதி வாங்கி ஊருக்கு கூட்டி வருகிறார். திரைக்கதை கங்கைக் கரையிலிருந்து, தென் தமிழ் நாட்டிலுள்ள மலைக்கோவில் நகருக்கு திரும்புகிறது.
கோவில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைகாரர்களை கொண்டு பணம் பார்ப்பவன் தாண்டவன். ரயில் பாட்டு பாடி பிச்சை எடுக்கும் பிச்சைக்காரியாக அம்சவள்ளி, நம்ம பூஜா தான். சந்தர்ப்ப வசத்தால் தான் இருந்த இடத்திலிருந்து பிரிந்து வந்து தாண்டவனிடம் சேருகிறார். அவரையும் மேலும் சில 'உருப்படி'-களையும் வைத்து 'தொழில்' செய்யும் இரண்டாம் நிலை முதலாளி, முருகன், நல்லவன், கடவுள் பக்தி உள்ளவன். மற்ற பிச்சைகாரர்களை உறவினர் போல் பாவிப்பவன். இந்நிலையில் ஒரு மலையாள முதலாளியின் அறிவுரையின் பேரில் உருப்படிகளை கேரளாவிற்கு எக்ஸ்சேஞ் செய்கிறான் தாண்டவன். மலையாள முதலாளி ஊனமுற்றவர்களை தூக்கிப் போவது கண்டு, அனுமார் வேடமணிந்த ஒரு கால் ஊனமுற்ற சிறுவன் ஓடி ஒளிவது, நெஞ்சை கசக்குவது போலிருந்தது. உச்ச கட்டமாக, முகம் முழுவதும் தீயில் வெந்து போன ஒருவனுக்கு, அம்சவள்ளியை 3 லட்சத்துக்கு விற்க முற்பட, அவள் போய் ருத்ரனிடம் தஞ்சம் அடைகிறாள். அவளை காப்பாற்றும் ருத்ரன், மலையாள முதலாளியை கொல்ல, போலீஸ் அவனை கைது செய்கிறது. பின் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போகவே ருத்ரன் விடுவிக்கப் படுகிறான். வெளியே வரும் ருத்ரனை தாண்டவன் கொலைவெறியுடன் தாக்க அவனது கதையும் முடிக்கிறது. தாண்டவனால் துன்பப்பட்ட அம்சவள்ளி தன்னை துன்பத்திலிருந்து விடுவிக்குமாறு ருத்ரனிடம் முறையிட அவளை உலகத்திலிருந்து விடுவித்து ருத்ரன் காசி திரும்புவதுடன் படம் முடிகிறது.
காசி அவ்வளவு அழகாக இருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் முதல் பத்து நிமிடங்களுக்கு கங்கையையும் காசியையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆர்த்தர் வில்சன். "பாவிகளுக்கு நான் அளிக்கும் மரணம் தண்டனை, துன்பப்படுபவர்களுக்கு நான் அளிக்கும் மரணம் விடுதலை" என தத்துவம் பேசும் இடத்தில் மிளிர்கிறார் ஆர்யா, பாலா-பட்டறையில் பட்டை தீட்டப் பட்ட மற்றுமோர் வைரம். கோயில் வாசலில் பிச்சை எடுப்பவர்களின் வாழ்க்கையை படம் பிடித்திருக்கிறார் பாலா, சபாஷ். இயந்தர தனமான மனிதர்கள் வடக்கில் தான் உண்டு என்ற எனது எண்ணத்தை பொடியாக்கி, இதயமில்லாதவர்கள் எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றனர் என உணர வைத்திருக்கிறார். பிச்சைக்காரர்களின் அவல நிலையை பறைசாற்ற "பிச்சை பாத்திரம்" பாடல் ஒன்றே போதுமானது. இசை ஞானிக்கு ஈடு இணையும் உண்டோ!. உடல் ஊனமுற்றோரின் உலகத்தையும், அவர்களிடையேயான பாச பிணைப்பையும், அன்பையும், இரக்க குணத்தையும் இவ்வளவு யதார்த்தமாக படம் பிடித்த எந்த தமிழ் படமும் எனக்கு தெரிந்து இல்லை. பூஜா அம்சவள்ளியாக மிளிர்கிறார். படத்தின் காட்சிக்கு காட்சி பாலாவின் முத்திரையே. படத்துக்கு ஒரு அவர்டேனும் நிச்சயம்!.