மிக்கி - மௌஸ் -online

Friday, April 17, 2009

இமயம் தொட்டானா தமிழன்?

புகை வண்டியும், விமானமும் மனித எண்ணத்தில் உதிப்பதற்கு முந்தய காலத்திலேயே தமிழன் குதிரைத் தேர் பூட்டி, யானையதனையும் அழைத்து பெரும் படையுடன் சென்று இமயம் தொட்டு வெற்றிக் கொடி நாட்டி திரும்பியுள்ளான் என்பதற்கான ஆதாரங்கள் தமிழ் காப்பியமெங்கும் காணக் கிடைக்கின்றன. கி.பி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டு என கணிக்கப் பட்ட தமிழின் தாய்க்காப்பியம், முதல் காப்பியம் என அடையாளம் காணப்பட்ட சிலப்பதிகாரத்திலும் இதற்கான சான்றுகள் உள்ளன.
திடீரென்று என்ன இந்த இமயம் தொட்ட தமிழன் புராணம்? என கேட்டால், சமீபத்தில் தரைவழி மார்கமாக நேபாளம் செல்ல நேர்ந்தபோது, இமயமலையின் பனிபொழியும் மலைச்சரிவுகளின் நடுவே பேஜ்நாத் என்னுமிடத்தில் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு 'மந்திர்' இருப்பதாக வண்டி ஓட்டுநர் முன்மொழியவும், வழியரிந்தோரும், வழிகாட்டியோரும் வழிமொழியவும், 'சரி-யென பார்க்கப் போன எனக்கு ஒரே அதிர்ச்சி.
இப்பொழுது மீண்டும் கதைக்கே வருவோம். சிலப்பதிகாரத்தில் புகார்க் காண்டத்தில், இந்திரவிழாவூரெடுத்த காதையில் கரிகாலன் இமயம் வரைச் சென்று கொடி நாட்டி வந்ததைப் பற்றி குறிப்பு(வரி 89-98) உள்ளது.

சிலப்பதிகாரம் காப்பியம் உருவான கதையைக் காணும் போது, நாட்டு மக்களும், அமைச்சர் முதலானோரும், தன் தனயனைவிட, இளையவன் தானே நாடாள மிகவும் பொருத்தமானவன் எனவுரைத்தபோது, தனக்கு அரசும், அரச வாழ்க்கையும் வேண்டாமென தூக்கியெறிந்து துறவு பூண்டார் இளங்கோவடிகள் (இளம் + கோ + அடிகள்). தலைவிரி கோலமாய விதவைப் பெண் ஒருத்தி கையில் ஒற்றைச் சிலம்புடன் தேர் ஏறி வானுலகம் போனதை மலைச்சாதியினர் கூறக்கேட்ட மன்னன் இளங்கோ-வை அக்கதையை காப்பியமாக இயற்றச் சொல்ல, அவரும் அருமைவாய்ந்த காப்பியமாக படைத்துக் காட்டினார். இவ்வாறு தன் தமையன் சிலப்பதிகாரத்தை சீரும் சிறப்புமாக படைத்தது கண்ட அண்ணன் சேரன் செங்கூட்டுவன் இமயத்திலிருந்து கல் கொணர்ந்து காவியத் தலைவி கண்ணகிக்கு சிலை வடிப்பேன் என வெகுண்டெழுந்து இமயம் வந்தான். அங்கே கல்லை பெயர்த்தெடுத்து நாடு திரும்புகையில், தன்னை எதிர்த்த ஆரிய அரசர்கள் கனக-விசயரின் தலைமேல் வைத்து கொண்டு வந்து தாயகம் சேர்த்தான் என்பதும் வரலாறு. சிறுபான்மை தமிழ்த்திராவிட இனத்தவரான (சுமார் ஆறு கோடி, இன்றைய நிலைமையில்), பெரும்பான்மை ஆரிய இன (சுமார் நூறு கோடி) மன்னர்களை அவர்கள் மண்ணிலேயே தோற்கடித்து வெற்றியுடன் திரும்பினான் என்பதைக் கேட்கும் போது உள்ளம் பேருவகை கொள்கிறது அல்லவா!.

இதுபோன்ற இமாலய வெற்றிக்கான ஆதாரங்கள் தமிழ் இலக்கியமெங்கும் கிடைத்தாலும் எழுத்தல்லாத ஒரு ஆதாரத்தை நேபாள பயணத்தின் போது பார்க்க நேர்ந்தது. முன்பு சொன்ன பேஜ்நாத் கோயில் தற்போது இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இப்போது இருக்கிறது. தற்ப்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மூலவரை எடுத்து வெளியே வைத்திருந்தார்கள். கோபுரங்கள் நவீனமாகவும், புதுப் பொலிவுடனும் இருப்பதை பார்க்கும் போது அவை இடையிடையே புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.




மூலவர் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அது பெரிய தொப்பையுடன் அமர்ந்த நிலையில் பார்ப்பதற்கு குபோரர் போன்ற தோற்றத்துடன் உள்ளது. அதனுடனேயே ஒரு வினாயகர் சிலை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. வாயிலில் இரு வாயில் காவலர்கள் நின்றுக் கொண்டிருக்கின்றனர். அதனுடன் பெரும்பாலும் எல்லாக் கோயில்களிலும் காணப்படும், சிங்கங்கள் காவல் காக்கின்றன. மூலவர்க்கு தமிழ்நாட்டில் உள்ளது போல சந்தனம் பூசி குங்குமம் வைத்திருந்தனர். மேலும் ஐயனாரப்பன் கோயில்களில் உள்ளது போல சூலங்களையும் குத்தி வைத்திருந்தனர். கோவிலுக்கு முன்னால் உள்ள குளத்தில் உள்ள மீன்களுக்கு பொரி-யிடும் சம்பிரதாயத்தையும் காலம் காலமாக கடைபிடிக்கின்றனர்.